Tuesday, February 5, 2008

திருக்குர்ஆனில் பெண்கள்!


ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்


பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.


பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.


மனிதப் பிறவியில் பெண் தனித்தன்மை வாய்ந்தவள் என்று உணர்ந்து மதிப்பவர்கள் ஒரு புறம் என்றால், அவளுக்கு ஆத்மா என்று ஒன்று உண்டா என்று காராசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபுறம்.
இப்படியாக ஆண்களின் பார்வையிலும் சிந்தனையிலும் பெண் பல நிலைகளில் பரிணமிக்கிறாள்.


பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வரலாறு மிக நீண்டதாகும். 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலிருந்து பெண்கள் உரிமைப் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எல்லைக் கடந்துப் போய் கொண்டிருக்கின்றது.


பெண்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அறிவாதாரத் தேவைகள் ஆகியவைத்தான் அவர்களுக்கான சரியான உரிமைகள் என்று ஆண்களில் ஒரு சாராரின் சிந்தனை வளர்ந்து அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உலக அழகிப் போட்டியும் உடைக்குறைப்பும் ஊர் சுற்றலுமே பெண்களுக்குத் தேவையான உரிமைகள் என்று அதற்காக பணத்தை அள்ளிக் கொட்டி பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டம் மறுபுறம்.


உண்மையில் பெண்களின் உரிமைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதில் பெண்களுக்கு மத்தியிலும் ஆண்களுக்கு மத்தியிலு்ம் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது என்றால் அதுதான் உண்மை.


பல்வேறு சாசன புத்தகங்கள், சட்ட புத்தகங்கள், அறிஞர் அவைகள் என்று அலசப்படும் இந்த விவாதத்தில் இதோ நாங்கள் குர்ஆனை முன் வைக்கிறோம். திருக்குர்ஆன் பெண்கள் பற்றி வரையறுத்துக் கொடுத்துள்ள அந்த சட்டங்களில் எது பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமோ அவ அனைத்தையும் நீங்கள் காணலாம்.திருக்குர்ஆன் வரையறுத்துக் கொடுத்துள்ள இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பெண்ணுரிமை என்ற விவாதமே தேவையற்ற ஒன்றாகி விடும்.


இஸ்லாம் பார்க்கும் பெண் இதோ


ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)


அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)


மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)


பொருள் திரட்டும் உரிமை


சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. (திருக்குர்ஆன் 4:32)


கல்வி கற்றல், கற்பித்தல்


நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (திருக்குர்ஆன் 9:71)


சொத்துரிமை


குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)


உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)


இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:11)


பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (திருக்குர்ஆன் 4:176)


மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை


நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)


திருமணக் கொடை (மஹர்) பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)


கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:24)


இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (திருக்குர்ஆன் 5:5)


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் மகளுக்கு திருமண கொடைக் கேட்டுப் பெற்ற முஸ்லிம்.


எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 28:27)


மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு


அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)


பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)


மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை


ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா? (திருக்குர்ஆன் 4:20)


உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)


பெண்களுக்குக் கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது.


இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)


தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் அவர்களுக்கு


மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)


மறுமணம் செய்யும் உரிமை


பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)


உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)


(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)


விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு


அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)


விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)


உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)


பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)


பிரியும் உரிமை


பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)


விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)


தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)


இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)


ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.


உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)


ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)


ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)


யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)


சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)


நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)


நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)


முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)


பாதுகாப்பு


ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (திருக்குர்ஆன் 24:4)


நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (திருக்குர்ஆன் 33:58)


நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 24:23)


பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)


நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)


மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129)


அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:2)


தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9)


நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)


பண்பாடு


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அழகில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)


நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:59)


கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 24:26)


திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 24:60)


நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 33:32)


உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)


நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (திருக்குர்ஆன் 24:27)


இஸ்லாம் வழங்கியுள்ள இந்த சட்டங்களில் எவரேனும் குறை இருப்பதாகக் கருதினால் அவர்கள் தங்கள் வாதத்தை இங்கே எழுதலாம்.

நன்றி: இதுதான்இஸ்லாம் வலைப்பூ

கண்ணியம் கொடுத்த ஹிஜாப் - ஸாரா போக்கேர்

சுதந்திரம் பற்றிப் பேசிப்பேசி அதன் எல்லை எதுவென்பதை ஒவ்வொரு முறையும் வரையறுத்து பின் அதை அறுத்து பின் புதிதாய் வரையறுத்து மனித மனம் எங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிறது. மனிதனைப் படைத்த இறைவனே, மனித உள்ளங்களில் ஓடக்கூடிய உணர்வுகளை அறிவதில் வல்லவன். இறைவசனங்களின் மூலம் இஸ்லாம் பெண்ணுக்கு வலியுறுத்தக்கூடிய உடை அளவிலான கட்டுப்பாட்டை, அவளின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்பதாக ஒரு சாரார் பேசிக்கொண்டிருந்தாலும் பேசுபவர் ஒவ்வொருவரும் தத்தம் அளவிலான உடைக் கட்டுப்பாடுகளை தத்தம் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்றபடி அளவுகோலை வைத்துள்ளனர் என்பதே யதார்த்தமாகும்! அதை மீறும்போது அதன் மூலம் ஆபத்துக்களையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் சந்திக்கின்றனர். அத்தகைய தேடல்களின் ஓட்டத்தில் சுதந்திர வேட்கையின் உச்சத்திற்குச் சென்று திரும்பியுள்ள ஒரு பெண்ணின் பேட்டி இங்கே, ஆடையில் சுதந்திரம் வேண்டும் என்று கேட்போரின் கவனத்திற்காக முன்வைக்கப்படுகிறது.- அபூ ஸாலிஹா
------------------------------------------------------------------------------------------------அமெரிக்காவின் நடுநாயகமாக விளங்கும் ஊரில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். இறுதியாக நான் ஃப்ளோரிடாவுக்கு, மியாமி கடற்கரையின் தெற்குப் பக்கமாகக் குடிபெயர்ந்தேன். வாழ்க்கையின் கவர்ச்சிகளைத் தேடுபவர்களுக்கான 'சூடான இடம் அதுதான். பெரும்பாலான சராசரி மேற்கத்தியப் பெண்கள் செய்வதையே நானும் பின்பற்றினேன். அதுதானே இயற்கையுமாகும்? என் தோற்றம், கவர்ச்சி இவற்றில் கவனம் செலுத்தினேன்.மற்றவர்களை எந்த அளவுக்கு என் பக்கம் இழுக்க முடியும் என்பதை வைத்து என் மதிப்பை அளந்தேன். பெரும் முனைப்புடன் அதற்காக நான் உழைத்தேன். தனிப்பட்ட பயிற்சியாளினியாக மாறினேன். கடற்கரையோரமாக மேல்குடி மக்கள் வாழும் பகுதியில் ஒரு வீடு வாங்கினேன். உடலை வெம்மைப்படுத்திக் கொள்வதற்காக வழக்கமாகக் கடற்கரைக்குச் செல்பவர்களில் ஒருத்தியாக மாறினேன். அந்த நேரத்தில் எது பெரும்பாலானவர்கள் வாழும் ஸ்டைலாக இருந்ததோ அதுவே எனதாகவும் இருந்தது.ஆனால் பெண் என்ற கவர்ச்சியை வைத்து நான் கழித்துக் கொண்டிருந்த அந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியைத் தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஆண்டுகள்தான் கழிந்து கொண்டிருந்தன.ஃபேஷனுக்கு நான் அடிமையாகிப் போயிருந்தேன். தோற்றத்தின் பிணைக் கைதியாகி விட்டிருந்தேன்.எனது வாழ்க்கை முறைக்கும் மன நிம்மதிக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது. குடி, பார்ட்டிகள், தியானம், சமூக சேவை, வேறு மதங்களைத் தழுவுதல் இப்படி பல விஷயங்களில் மனதைச் செலுத்தித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் எதுவுமே என் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த இடைவெளியை நிரப்பவில்லை. மாறாக ஒரு பள்ளத்தாக்கைப் போல அது மேலும் வளர்ந்து ஆழமாகிக் கொண்டிருந்தது. நான் செய்து வந்ததெல்லாம் நோய் நிவாரணிகள் அல்ல, தற்காலிகமாக வலியை மறக்கடிப்பவை மட்டுமே என்பதை கடைசியில் நான் புரிந்து கொண்டேன்.செப்டம்பர் 11, 2001 ஆகிவிட்டிருந்தது. இஸ்லாத்தின் மீதான தொடர்ந்த குண்டுமாரிகளையும் விமர்சனங்களையும், இஸ்லாமிய மதிப்பீடுகள், பண்பாடு, புதிய சிலுவைப்போர் என்ற பிரகடனங்கள் இவற்றையெல்லாம் பார்க்க நேரிட்டது. அப்போதுதான் இஸ்லாம் என்ற ஒன்றை கவனிக்க ஆரம்பித்தேன். இஸ்லாம் என்றால் பெண்களை கூடாரங்களில் அடைத்து வைத்திருப்பவர்கள், மனைவிகளை அடிப்பவர்கள், தனியிடத்தில் ஒதுக்கி வைப்பவர்கள், பயங்கரவாதிகளின் உலகம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.பெண் விடுதலைக்காகவும், இன்னும் இந்த உலகை சிறப்பானதாக மாற்றுவதற்கும் போராடும் ஒருத்தி என்ற முறையில் என் வழி, என்னைப் போன்றே, வித்தியாசம் பாராமல் எல்லாருக்கும் நீதியும் சீர்திருத்தமும் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் இன்னொருவரின் வழியோடு சந்தித்துக் கொண்டது. எனது புதிய வழிகாட்டியானார் அவர். அவருடைய வழிகாட்டுதல்களில் அந்த நேரத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்வாதார உரிமைகள் போன்றவையும் இருந்தன. எனது புதிய ஈடுபாடு அடிப்படையில் பல வகையிலும் வித்தியாசமானதாக இருந்தது. தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் நியாயம் என்றில்லாமல், நீதி, நியாயம், விடுதலை, மரியாதை போன்ற யாவும் எல்லாருக்கும் பொதுவானவை, எல்லாருக்குமே கிடைக்க வேண்டியவை என்பதை நான் புரிந்து கொண்டேன். சொந்த நலன் என்பதும் பொது நலன் என்பதும் முரண்பட்டவை அல்ல என்பதையும் தெரிந்துகொண்டேன்."படைக்கப்பட்ட அனைவருமே சமம்" என்பதன் அர்தத்தை முதன் முறையாக நான் புரிந்துகொண்டேன். நம்பிக்கை மட்டுமிருந்தால், இந்த உலகம் முழுவதுமே ஒன்றுதான், படைப்பினங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொண்டேன்.மேற்கத்திய உலகம் எப்போதுமே எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருக்கும் குர்ஆன் என்ற புத்தகத்தை ஒருநாள் பார்க்க நேர்ந்தது. முதலில் குர்ஆனின் நடையும் அணுகுமுறையும் எனக்குப் பிடித்திருந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையில் இருக்கும் உறவு இவை பற்றியெல்லாம் அது சொன்ன விஷயங்கள் என்னை மயக்கின. ஒரு விளக்கவுரையாளரோ அல்லது ஒரு சமயத்தலைவரோ தேவையில்லாமல் மனதோடும் ஆன்மாவோடும் உறவாடிய புத்தகமாக அது இருந்தது.கடைசியில் உண்மையில் குர்ஆன், என்னைப் பாதித்ததை உணர்ந்தேன். எனக்கு ஆத்ம திருப்தி தரும் செயல்பாட்டின் இறுதிக்கட்டமாக, வழிபாடுகளைச் செயல்படுத்தும் ஓர் உண்மை முஸ்லிமாக அமைதியாக வாழத் தகுதியான இஸ்லாத்தில் நான் இணைந்தேன்.ஓர் அழகிய நீண்ட அங்கியை நான் வாங்கினேன். தலைமீது போடும் துணியும் வாங்கிக் கொண்டேன். குட்டைப் பாவாடையிலும், மேற்கத்திய வியாபார உடையான பிகினியிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் அலைந்த அதே தெருக்களிலும் சுற்றுப் புறங்களிலும் இந்த உடையோடு நான் நடந்தேன். ஏற்கெனவே பார்த்த அதே மனிதர்கள், அதே முகங்கள், அதே கடைகள்தான். ஆனால் ஒரு வீரியம் மட்டும் முன்புபோல இல்லை. அது நான்தான். ஒரு பெண் என்ற வகையில் எனக்கு முன்பு கிடைக்காத நிம்மதி முதன்முறையாகக் கிடைத்தது. விலங்குகள் உடைபட்டு நான் இறுதியாக சுதந்திரமடைந்து விட்டதை உணர்ந்தேன். ஏற்கனவே நான் அந்த தெருக்களில் சென்றபோது, ஒரு வேட்டைக்காரன் தான் வேட்டையாட இருக்கும் அப்பாவி மிருகத்தைப் பார்ப்பது போலத்தான் என்னைப் பார்த்தார்கள். ஆனால் இப்போது ஆச்சரியமாக அவர்கள் என்னைப் பார்த்தது எனக்கு சந்தோஷமளித்தது.திடீரென்று எனது தோள்களில் இருந்து ஒரு 'சுமை' எடுக்கப்பட்டுவிட்டது. எனது நேரத்தையெல்லாம் முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் செலவழித்துக் கொண்டிருக்கவில்லை. ஆம், இறுதியாக நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன்.'மிகவும் அவமரியாதை செய்யும் இடம் என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை நான் என் இதயத்தில் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, அதை எனக்கு இன்னும் நெருக்கமாக்குவதற்கும் சிறப்பாக்குவதற்கும் போதுமானதாக இருக்கிறது.ஹிஜாப் (பர்தா) எனக்கு திருப்தி தருவதாக இருந்தது. நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அதில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. நான் இஸ்லாத்துக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்ட என் முஸ்லிம் கணவரிடம், நான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாபில் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என்று கேட்டேன். ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அப்படிப்பட்டதன்று என்றும் அவர் கூறினார். அந்த சமயத்தில் என் ஹிஜாப் ஆடை என் முகம் தவிர, கூந்தல் முழுவதையும் மூடும் ஒரு தலைத்துணியும், கழுத்திலிருந்து பாதம் வரை மூடிய 'அபயா' என்று சொல்லப்பட்ட ஒரு நீண்ட கருப்பு அங்கியும் கொண்டதாக இருந்தது.ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக என் கணவரிடம் சொன்னேன். அது அல்லாஹ்வுக்கு அதிகம் பிடித்தமானதாக இருக்கும். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறினேன். அவர் எனது முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப்பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், என் கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுப்பதற்காக என்னைக் கூட்டிச் சென்றார்.ஹிஜாபும் நிகாபும் பெண்களையும் பெண்ணுரிமையையும் நசுக்குவதாகவும், சமூக இணைவுக்கு தடையாக இருப்பதாகவும் சொல்லி விரைவிலேயே அரசியல்வாதிகள், வாடிகன் பாதிரிகள், விடுதலை விரும்பிகள், மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் ஓர் எகிப்திய அதிகாரி, "பின் தங்கிய நிலையின் அடையாளம்" என்று ஹிஜாபையும் நிகாபையும் வர்ணித்தார்.சில அரசாங்கங்கள் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லும் போது அதை எதிர்க்க வேண்டிய மனித உரிமைகள், பெண் விடுதலை இவற்றுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளும் அதைக் கண்டு கொள்வதில்லை.. ஆனால் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கொடுக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்படுவதை இந்த அமைப்புகள் கண்டு கொள்வதே இல்லை. படுமோசமான, வெளிப்படையான வஞ்சகம், கபடம் என்று நான் இதைப் பார்க்கிறேன். துனீசியா, மொராக்கோ, எகிப்து போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில் மட்டுமின்றி, ஃபி்ரான்ஸ், ஹாலந்து, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஜனநாயக அரசுகளிலும் ஹிஜாப், நிகாப் அணியும் பெண்களுடைய உரிமைகள், வேலை, கல்வி ஆகியவற்றில் இன்று மறுக்கப்படுகின்றன.நான் இன்னும் ஒரு பெண்ணியவாதிதான். ஆனால் முஸ்லிம் பெண்ணியவாதி. நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவர்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுத்து மனித குலத்துக்கு வழிகாட்டக் கூடியவர்களாக மறுபடியும் ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லன எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தீயன விலக்க வேண்டும். எல்லாத் தீமைகளையும் விலக்க வேண்டும். கெடுதியான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நிகாப் அல்லது ஹிஜாப் அணியும் நமது உரிமைக்காகப் போராட வேண்டும். நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக. அதே சமயம், ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், இதன் அர்த்தம் என்ன, ஏன் இது நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது என்பனவற்றை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.நிகாப் அணியும் பெண்களில் பலர் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து மீண்டு வந்தவர்கள். அதில் சிலருக்குத் திருமணம்கூட ஆகவில்லை. இன்னும் பலருக்கும் நிகாப் அணிவதற்கு குடும்பம் அல்லது சுற்றத்தின் ஆதரவு இல்லை. இது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வாகும். இதை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை.உலகெங்கிலும் உள்ள எல்லா ஊடகங்களிலும், தொடர்புச் சாதனங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைல் என்ற பெயரில் அணிவதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாப், அதன் சிறப்புகள், அதை அணிவதால் எனக்குக் கிடைத்ததுபோல, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, சந்தோஷம் ஆகியன பற்றி பெண்கள் அறிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் சொல்வேன். விடுதலையின் குறியீடாக எனக்கு நேற்றுவரை பிகினி இருந்தது. ஆனால் உண்மையில் என் ஆன்மிகத்திலிருந்தும், மரியாதைக்குரிய ஒரு மனுஷி என்பதிலிருந்தும் தான் அது என்னை விடுவித்திருந்தது.சௌத் பீச்சில் என் பிகினியையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் நான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னைவிட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் செய்வேன். இன்று,பெண் விடுதலையின் புதிய குறியீடு நிகாப்தான்.ஹிஜாப் கொடுக்கும் இஸ்லாமிய கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்முறையைத் தேர்வு செய்யும் பெண்களுக்கு நான் சொல்வது இதுதான்: நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை.
நன்றி : நாகூர் ரூமி / http://www.satyamargam.com/index.php?option=content&task=view&id=649

Monday, February 4, 2008

இது அறிவாளிகளுக்கு மட்டுமே


எதாவது புரிஞ்சுதா புரிஞ்சுதுன்னா கமெண்ட்ஸ் கொடுக்கவும் .